என்னருகே வாடாதே!!
எங்கோ மலர்ந்து எங்கோ கனிந்து
என்கை அடைந்த புதுமலரே - உன்
இளமை எனக்குத் தாமலரே - ஒளி
தங்கும் உனையே பார்த்துச் சிலிர்க்கும்
தருணம் எனக்குத் தேன்மலரே - நீ
தெம்பை அருளும் வான்மலரே!
இளமை எனக்குத் தாமலரே - ஒளி
தங்கும் உனையே பார்த்துச் சிலிர்க்கும்
தருணம் எனக்குத் தேன்மலரே - நீ
தெம்பை அருளும் வான்மலரே!
வியர்வை சூளும் நாளில் என்மேல்
வியக்கும் மணத்தை நீபெய்வாய் - நான்
வேர்போல் உணர நீசெய்வாய் - தினம்
முயலும் பொழுதில் கண்ணால் சிரித்து
முன்னால் ஊக்கும் செயல்செய்வாய் - அந்த
முறுவலினாலே மையல்செய்வாய்!
ஒருநாள் தானே வாழ்வெனும் போதும்
ஓயாமல் நீ சிரிக்கின்றாய் - அந்த
உவகையிலே ஒளி நிறைக்கின்றாய் - கணம்
திருநாளாக்கித் தீரும் முன்னம்
தித்திப்பை நீ விதைக்கின்றாய் - உள
திசையை நீயே நிறைக்கின்றாய்
உன்னை ஏந்தும் ஒவ்வொரு கணமும்
உள்ளில் புதுமை காண்கின்றேன் - நான்
உண்மையிலேயே பிறக்கின்றேன் - உனைத்
தென்றல் உரசி என்னிடம் வந்து
சேதி சொல்வதை வியக்கின்றேன் - நீ
செய்த மாயமாய் நினைக்கிறேன்!
உன்னிடம் கற்றது நாமாய் இருத்தல்
உனக்கும் கொஞ்சம் சொல்கின்றேன் - என்
உள்ளையும் உனைப்போல் நீமலர்த்து - வந்(து)
என்னருகே சிரி என்னருகே ஒளிர்
என்னருகே நீ வாடாதே - என்
இதயம் அதனைத் தாங்காதே!!
-விவேக்பாரதி
25.03.2023
Comments
Post a Comment