வேள்விச் சுடர்
எரியப் போவது விளக்கல்ல - நாம்
இயங்குகிறோம் எனும் அடையாளம்!
தெரியப் போவது தனித்தனியே - நாம்
சேர்ந்திருப்பதன் அறைகூவல்!
ஒளிரப் போவது வீட்டுக்குள் - நம்
உள்ளத் திருக்கும் சிறுநெருப்பு!
மிளிரப் போவது பிணிநீங்கி - நாம்
மீண்டிடுவோம் எனும் நம்பிக்கை!
விளக்கை ஏற்றி நடுவீட்டில் - நம்
விழைவை நினைத்து வைய்யுங்கள்
களங்கம் இன்றி மின்சாரம் - தனைக்
கணக்காய் அணைத்து நில்லுங்கள்!
கேள்வி எல்லாம் இருக்கட்டும்! - சொல்
கேட்போம் என்பதைக் காட்டுங்கள்
வேள்வித் தீயாய் நடுவீட்டில் - சிறு
விளக்கின் ஒளியை ஏற்றுங்கள்!
இருட்டில் தானே உயிர்வளரும் - அந்த
இருட்டில் நம்பும் பலம்பெருகும்
மிரள வேண்டா! அறைநடுவே - ஒளி
மின்னும் அதுநம் சூரியனே!!
-விவேக்பாரதி
05.04.2020
Comments
Post a Comment