வலியுள்ள பொழுதுகள்
இடியின் முழக்காய்க் கேட்கும் - என்
இதயக் கூட்டைத் தாக்கும்!
அடிநீ இல்லா இரவினில் எல்லாம்
அடிகள் நெஞ்சைப் பேர்க்கும் - இதன்
அடி புரியாதே யார்க்கும்!
கண்கள் மூடக் காட்சி யெல்லாம்
கன்னி உருவில் நெருக்கும் - அது
காட்டுப் போரை நிகழ்த்தும்
எண்ணம் எங்கும் ஏங்கும் காதல்
எப்படியோ அடம் பிடிக்கும் - என்
ஆவியும் அதனால் துடிக்கும்!
சும்மா இருந்த மனதைக் கீறி
ரணமாக் குவதே வழக்கம் - இது
காதல் செய்யும் புழக்கம்
அம்மா தேவி பொறுப்ப தில்லை
அருகில் வரும்நாள் வரைக்கும் - நான்
வாழும் பொழுதும் வலிக்கும்!!
-விவேக்பாரதி
20.04.2020
Comments
Post a Comment