அழுதாலும் நான் கலைஞன்
யாருக்கேனும் கேட்கட்டும்! நான்
யாழை மீட்டுகிறேன்! மனப்
போரில் கிடைத்த வலிகள் தடவிப்
போதனை பேசுகிறேன்!
யாரேனும் இதைப் பார்க்கட்டும்! நான்
ஓவியம் தீட்டுகிறேன்! அதில்
உள்ள நிறங்கள் என் உணர்ச்சிகள்
உருக்கிப் பூசுகிறேன்!
நீருக்குள்ளே மீன்போலே, சிலர்
நிஜத்தில் அழுவதுண்டு! அவர்
நினைவினில் எல்லாம் ஆயிரம் கனவு
நித்தம் வளர்வதுண்டு!
காரணமில்லா அழுகையில்தான் பல
காயம் வலிப்பதுண்டு! அது
காட்டிச் செல்லும் ஞாபகம் வழியே
கவிதை பிறப்பதுண்டு!
இருவிழி வழிவரும் அழுகைக்கே, இவ்
இரவு நனைகிறதே! இன்னும்
எத்தனை எத்தனை அழுகைகள் உண்டு
எல்லாம் தாங்கிடுமோ?
ஒருவரின் இசைக்கே இவ்வுலகம், கண்
உறங்கிக் கிடக்கிறதே! மனம்
உண்மையில் எழுப்பும் இசைகேட்டால் இந்த
உலகம் என்படுமோ?
அழுதாலும் நான் கலைஞன்தான் - என்
அழுகை கலைத்துளிகள்! அட
முழுதும் அழுதிட வில்லையென் றாலும்
மூழ்கும் மழைத்துளிகள்!
என்னவோ
யாருக்கேனும் கேட்கட்டும்! நான்
யாழை மீட்டுகிறேன்! மனப்
போரில் கிடைத்த வலிகள் தடவிப்
போதனை பேசுகிறேன்!!
-விவேக்பாரதி
11.02.2020
Comments
Post a Comment