நேற்றைய நெஞ்சிலிருந்து - சேவாலயா தரிசனம்

என் இல்லம் தேடி மகிழுந்தில் வந்தார் திரு.முரளி அவர்கள். என்னை அழைத்துக்கொண்டு திருநின்றவூருக்கு அருகில் இருக்கும் கசுவா(கசிவாய்) என்னும் கிராமத்தில் இருக்கும் தனது பள்ளிக்கு வந்தார். பொதுவாகவே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்ற எனக்கு அந்தப் பெயர்பலகையே பிரம்மாண்டமாகப் பட்டது. "மஹாகவி பாரதியார் மேனிலைப் பள்ளி" இந்தப் பெயருக்காகவே அந்த மண்ணை ஒருமுறையேனும் நாம் தரிசிக்க வேண்டும். உள்ளே நுழைந்ததும் இளஞ்சிட்டுகள் போல மூன்று குழந்தைகள் "வணக்கம் ஐயா. சேவாலயா உங்களை வரவேற்கிறது" என்று வரவேற்று பன்னீர் தெளித்து, சந்தனம் வழங்கி, இனிப்பு கொடுத்து ஒரு புன்னகைக் கும்ப வரவேற்பை நிகழ்த்தினர். எத்தனை பூரண கும்ப வரவேற்பு வந்தாலும் அதன்முன் தோற்கும் என்று நான் உறுதியாகக் கூறுவேன். உள்ளே சேவாலயாவின் சேவைகள் அத்தனையையும் விளக்கி ஒரு காணொலிப் படம் காண்பித்தார்கள். அதில் ஒருவர் தான் சேவாலயாவில் படித்து அங்கேயே வேலை பார்ப்பதாகவும், அதனால் அந்தப் புனிதமாக கோவிலுக்குள் செருப்பணியாமல்தான் தான் நடப்பதாகவும் சொன்னது எனக்கு பெரும்வியப்பையும் மரியாதையையும் உண்டுபண்ணியது. அதன்பின் நானும் செருப்பில்லாமல் தான் அந்த வளாகத்தைச் சுற்றிப் பார்த்தேன். மாண்டிஸரி அமைப்பிலான பாடத்திட்டமும் விளையாட்டு முறையான படிப்பும் என்று மாணவர்களை நேரடியாக செயல்பட வைக்கும் கல்விமுறைகளைக் கண்டேன். சில வெளிநாட்டவர்கள் வந்து தன்னார்வர்த்துடன் அங்கே பணியாற்றுகிறார்கள் என்பதையும் பார்த்துத் தெரிந்துகொண்டேன். கவிதை மன்றம் மற்றும் தமிழ்மன்றம் தொடங்க விழா ஏற்பாடு செய்திருந்தார்கள் அதில் கலந்துகொண்டோம்.
 
மாணவர்கள் அங்கே கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டினார்கள். பொதுவாகவே பள்ளிகளில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளைக் காட்டிலும் அவை கொஞ்சம் மாறுபட்டு இருந்தன. பரதநாட்டியம், பாரதியார் கவிதை முழக்கம், சமயக்குரவர் நால்வர் போல் வேடமணிந்த சிறுவர்கள் அவர்களது தேவாரங்களை ஓதியமை, தமிழைக் குறித்து மாணவர்கள் எழுதிய கவிதைகள், திருக்குறள் மற்றும் புதிய ஆத்திசூடியை மாணவிகள் ஒப்புவித்தது போன்று மெய்சிலிர்க்க வைக்கும் கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்கள். அனைத்தையும் கண்டு களித்துவிட்டு மேடை ஏறினோம். சேவாலயாவின் சிறப்புகளைக் கூறி விருந்தினர்களான என்னையும் முனைவர் கிள்ளிவளவன் ஐயாவையும் திரு முரளி வரவேற்றார். கவிதை மன்றத்தைத் தொடக்கி மாணவர்களிடம் சிலவார்த்தைகள் பேசுமாறு என்னைக் கேட்டுகொண்டார். நானும் அவர்களுக்காக எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தையும் கவிதையையும் கூறி உரையாற்றினேன். தமிழ் மொழியில் உள்ள வழக்குச் சொற்களின் சிறப்புகளை எடுத்துக் காட்டி கிள்ளிவளவன் ஐயா பேசினார். மாணவர்கள் கவனமாகவும் ஒழுக்கமாகவும் அமர்ந்திருந்தமை எனக்கு ஆச்சர்யத்தை அதிகரிக்கொண்டே இருந்தது. பொதுவாகவே இலவசமாக கிடைக்கும் எந்தவொரு விஷயத்தின் மீதும் நமக்கு சிரத்தை குறைந்துதான் போகும் என்பார்கள் ஆனால் அங்கே கல்வியில் தொடங்கி அனைத்தையும் இலவசமாகவே பெறும் மாணவர்கள் அதை மிகவும் கவனமுடன் பயன்படுத்திக் கொண்டமை அவர்களது உயர்ந்த பண்பினைக் காட்டியது.

விழா முடிந்ததும் உணவு உண்டோம். தினமும் 1500 ஆட்களுக்குச் சமையல் நடக்கிறது அந்தச் சத்துணவுக் கூடத்தில். ஏறத்தாழ 1800 மாணவர்கள் இலவச உணவும் கல்வியும் பெறுகிறார்கள் என்பதை எண்ணும்போதே பெருவியப்பாக இருந்தது. 300 மாணவர்கள் அங்கேயே தங்கி பயில்கிறார்கள். பள்ளி மட்டுமில்லாமல் முதியோர் இல்லம், தொழிற்கல்வி கற்றுக் கொடுக்கும் கல்லூரி, ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு விடுதி, கோசாலை, இயற்கை விவசாயம் செய்யும் இடம், சிறு மருத்துவமனை என்று சுற்றி இருக்கும் கிராமங்கள் சகல வசதிகளையும் பெற்றுக் கொள்ளும்படியாக ஒரு அமைப்பு சத்தமில்லாமல் நிகழ்ந்து கொண்டிருப்பது என் பிரம்மிப்பை மலையளவு உயர்த்திவிட்டது. மொத்த இடத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு வந்ததும் கையில் உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள் என்றொரு விண்ணப்பத் தாளையும் திரு. முரளி அவர்கள் கொடுத்தார். அதையும் மனதார பூர்த்திசெய்துவிட்டு, பிரியா விடையாக அங்கிருந்து கிளம்பினேன். இதனை எழுதி நான் கண்ட அனுபவத்தை நீங்கள் அனைவரும் காண வேண்டும் என்றும் நினைத்தேன். சேவாலயாவுக்குச் சென்று பாருங்கள். மஹாகவி பாரதியார், சுவாமி விவேகானந்தர், மஹாத்மா காந்திஜி ஆகியோரின் கருத்துகள் எந்த அளவுக்கு ஒரு தனி மனிதனின் முன்னெடுப்பால் நிறைவேறி இருக்கின்றன என்பதனை நீங்கள் பார்ப்பீர்கள்.
உங்களால் முடிந்தது என்ன ?

பிறந்தாநாள், திருமணநாள் போன்ற சுப நிகழ்ச்சிகளை அந்தக் குழந்தைகளோடு கொண்டாடுங்கள். மழலைகளின் சிரிப்பு இறைவன் வசிக்கும் கோவில் அல்லவா!

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
   இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
   ஆலயம் பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
   பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
   ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்.
 
-பாரதி-

சேவாலயா வாழ்க! அவர்கள் சேவை வாழ்க!

-விவேக்பாரதி
12.07.2018

Comments

Popular Posts