கிழக்கில் நின்று நாணுவது யார்?



கீழ்வான் இப்படிச் சிவக்கிறதே
கிழக்கே நின்று நாணுவதார்?
வாழ்வாய் என்றே உலகிற்கு
வைக்கும் திலகக் குங்குமமோ?
சூழ்வானத்தில் யார் செம்பைச்
சுட்டுக் குழைத்துப் பூசுகிறார்?
ஏழ்வண்ணத்தில் இந்தநிறம்
எப்படி தானோ தப்பியது?

கண்முன் தெரியும் செவ்வானம்
காரக் குழம்பை நினைவுறுத்தும்!
மண்ணில் வீட்டு வாசலிலே
வரையும் கோலச் செம்மண்ணின்
வண்ணம் அதனை இங்கேதான்
வடிக்கின்றாரோ கலைவல்லார்?
உண்மை காட்டும் விடியலுக்கும்
உகந்த தன்றோ செம்மைநிறம்!

கெட்டி யாகக் கையிறுக்கிக்
கொஞ்சம் மூடி நாம்திறந்தால்
கிட்டும் கையில் செவ்வானம்
கிளரும் அதிலே இளமுள்ளம்!
ரத்தச் சிவப்புச் செவ்வானை
ரசிக்கச் சொல்லிக் காலையிலே
வெட்ட வெளிதான் காட்டுகையில்
வெற்றுத் தூக்கம் வீணலவோ!!

விவேக்பாரதி
15.04.2024
காலை 05.20

Comments

Popular Posts