பாரதி ஒரு புயல்



- இலக்கியச் சாரல் அமைப்பின் இணைவழிக் கவியரங்கில் படைக்கப்பட்ட கவிதை - 

 
சத்தமே இன்றி தவழ்கின்ற மாக்கடல்
சீரும் – கரை மீறும்
சட்டச் சடசட என்றுடன் காற்றுவந்
தாடும் – அலை யோடும்
மொத்த மரங்களும் சூறையில் சிக்கிட
மோதும் – வலி ஓதும்
மூளும் புயல்வர இத்தனையும் நிஜ
மாகும் – பொது வாகும்
 
அதுபோல்,
கண்ணில் தீப்பொறி நெஞ்சில் தவவெறி
கவிதைத் தமிழின் சாரதி – இந்த
மண்ணில் புதுநெறி வகுக்கப் பிறந்தவன்
மாபெரும் புயலே பாரதி!
 
தேசம் முழுவதும் நாசம் நடைபெற
தேய்ந்து கிடந்திடு பொழுதினில் – ஒரு
ஓசை இன்றியே அடிமைத் தளைநமை
ஒடித்து வளைத்த வேளையில்,
நேசம் எனுமொரு அமுதைத் தாங்கியே
நேரில் பூமியில் வந்தவன் – தன்
ஆசை அனைத்தையும் யாரும் ரசித்திடும்
அருங்கவி யாகவே தந்தவன்
 
எதிலும் துள்ளல்கள் எங்கும் பாய்ச்சல்கள்
எல்லா வேளையும் கர்ஜனை – சிறைக்
கதவுகள் இடிபட விலங்குகள் பொடிபட  
கனல்கள் தெறிக்கும் சிந்தனை
நதியாய் அன்பினில் மழையாய்க் கருணையில்
ஞானத்தில் பெரும் கடலவன் – பகை
உதிக்கும் பொழுதினில் உடனே எழுந்ததை
உருவில தாக்கும் புயலவன்
 
கண்ணில் தீப்பொறி நெஞ்சில் தவவெறி
கவிதைத் தமிழின் சாரதி – இந்த
மண்ணில் புதுநெறி வகுக்கப் பிறந்தவன்
மாபெரும் புயலே பாரதி!
 
சங்கீதச் சாளரத்தில் தென்றல் காற்று
சகமாக அனைவரையும் பார்க்கும் மாரி
பொங்குகிற அன்பினிலே கருணை வெள்ளம்
பொசுக்கிவிடும் சூட்டிலவன் மதிய வெய்யில்
வெங்கனலும் பெரும்விசையும் உருவாய்க் கொண்ட
வேட்கையிலே பாரதியோர் புயல்தான் கண்டீர்
தங்குநிறை வாழ்க்கையெலாம் புயலுக்கில்லை
தரணிமிசை புயல்சீற்றம் மறப்பதில்லை!
 
நீதியறி வடங்கிப்போய் அமைதி காத்த
நிரைகடலாம் மக்களிடை பாய்ச்சல் தந்தான்
சாதிவெறி காடுகளாய்க் கிடந்த போது
சமத்துவத்துச் சூறையெனக் கீழே சாய்த்தான்
ஆதிதனை மறந்தோரை திருப்பிப் போட்டு
அனைவருக்கும் பழம்பெருமை உணரச் செய்தான்
போதெல்லாம் பழமையிலே இருந்த வர்க்குப்
புதியபல மின்னல்கள் பாய்ச்ச வந்தான்
 
பாரதியாம் புயலிந்தத் தமிழர் நாட்டில்
பக்குவமாய்த் தனிமையம் கொண்ட போது
வேரூன்றி நின்றதெலாம் விருட்ச மாச்சு
விளையாட வந்ததெல்லாம் விழுந்தே போச்சு
காரியமாய் பூமிவந்த காரணத்தைக்
காலத்தால் செய்துவிட்டு மறைந்து போனான்
வீரியமாய் அப்புயலும் செய்த தெல்லாம்
வீதிகளில் இன்றவளும் இருக்கு தம்மா!!

-விவேக்பாரதி 
27.12.2020
 

Comments

Popular Posts