ஏசுவை வரவேற்போம்
யூத நிலத்தினில் காத லரும்பிட
உத்தமன் தோன்றுகிறான் – திரு
மாதவள் மேரியின் மேனியில் தெய்வத
மாமணி தோன்றுகிறான்
பெத்தல கேமெனும் முத்தொளிர் பூமியில்
பேரிறை தோன்றுகிறான் – ஒரு
சித்திரம் போலரும் மட்டுத் தொழுவினில்
சிரிப்புடன் தோன்றுகிறான்
உலகவர் யாத்ரிகர் ஆகிடவே அவன்
ஒளியுடன் தோன்றுகிறான் – பெரும்
உண்மையின் தூதுவன் மக்களை உய்த்திடும்
உறுதியில் தோன்றுகிறான்
மலரினும் மெல்லிய உள்ளம் படைத்தவன்
மண்ணிதில் தோன்றுகிறான் – அருள்
மாரி வழங்கிட ஏசு வெனும்கரு
மாமுகில் தோன்றுகிறான்
அன்பெனும் மந்திரம் உச்சரிக்க சிறு
ஆண்டவன் தோன்றுகிறான் – தன்
அற்புத சக்தியில் அறிவு புகட்டிட
அதிசயன் தோன்றுகிறான்
துன்பங்கள் தாங்கியும் ஆசிகள் சேர்த்திட
தூதுவன் தோன்றுகிறான் – சிறு
தொழுவினில் வைக்கோல் வெளியினில் புதிதொரு
சூரியன் தோன்றுகிறான்
தேவதை யாவரும் பூமழை தூவிட
தேவனே தோன்றுகிறான் – நம்
தேவைகள் யாவையும் தானெனச் செய்திடும்
செய்கைகள் தோன்றுகிறான்
நாவுள மனிதர்கள் யாவரும் வாழ்த்திட
நல்லவன் தோன்றுகிறான் – இந்த
நானிலம் முழுவதும் புனிதம் அடைந்திட
நமக்கென தோன்றுகிறான்
ஆமேன் எனுமொலி ஆர்ப்பரிப்போம் அவன்
அழகினை வரவேற்போம் – நம்
அறியாமை இருள் நீக்கிடவே வரும்
அம்புலி வரவேற்போம்
நாமெனில் அவனென அவனெனில் நாமென
நாடியே வரவேற்போம் – ஒரு
நள்ளிரவில் வரும் வெள்ளியவன் பதம்
நமக்கென்றே ஏற்போம்!!
-விவேக்பாரதி
08.12.2020
அருமை நண்பா
ReplyDelete