உண்மையைத் தேடி...
நான்யார் நான்யார்
யார்யார் நான்தான் யார்?
பார்ப்பதில் எல்லாம் உண்மையைத் தேடும்
பத்திரிகை யாளனா? - தினம்
பார்ப்பதை உண்மை என்று முகிழ்ந்து
பாடிடும் கவிஞனா?
உணர்வுத் தளத்தில் உயரே பறக்கும்
உன்னதப் பிறவியா? - சக
மணங்களோடே சேர்ந்து மணக்கும்
மலர்களின் ஜாதியா?
அறிவைக் கேட்டு வேலை செய்யும்
அதிகாரத்தவனா? மனம்
பறக்கச் சொல்லும் வார்த்தை நம்பிப்
பறவை ஆனவனா?
அடுத்தவர் சொல்லை அப்படியே நான்
ஆற்றும் எந்திரமா? - அட
தடுப்பவர் இல்லை என்ற நினைப்பில்
தளங்கள் செய்பவனா?
அதிசயம் அற்ற தினத்தில் புதைந்து
அழுகை மறந்தவனா? - நான்
துதிக்கும் தெய்வம் துணைவர என்றே
தொல்லை செய்பவனா?
எனக்குள் புதிதாய் எப்படி எல்லாம்
எரிமலை வெடிக்கிறது? - அது
கனக்கும் சுமையைக் கழற்றி வைக்கக்
கவிதை பிறக்கிறது!
நான்யார் என்னும் கேள்வி இருக்க
நாளும் நகர்கிறது - அது
வான்போல் விரிந்து தெரியும் நாளில்
வாழ்க்கை புரிகிறது!!
-விவேக்பாரதி
07.08.2019
Comments
Post a Comment