சொல்லைக் கடந்த சுகம்
சந்த வசந்தம் கூகுள் குழுவில் கரூர் புலவர் இனியனார் தலைமையில் நடந்து கொண்டிருக்கும் கவியரங்கில் நான் படைத்த கவிதை...
எத்தனை சுகமடா நாட்டுக்குள்ளே - அவை
எல்லாம் அடங்குமா பாட்டுக்குள்ளே!
எத்தனை இனிமைகள் மண்ணுக்குள்ளே - அதை
எழுத முடியுமோ சொல்லுக்குள்ளே!
தூக்கம் விழிக்கையில் செவிகளை மோதிடும்
செவ்விசை தேனின் சுகம் - மனம்
துவள்கின்ற போதினில் நண்பரின் தோள்களே
துணையாக நிற்றல் சுகம்
காக்கின்ற கடவுளின் பேர்சொல்லிப் பாடிநம்
கண்கள் பணித்தல் சுகம் - நெஞ்சில்
காலையில் மாலையில் வேளையெல் லாமுமே
கவிதை பிறத்தல் சுகம்!
காதல் எனும்கதை கண்கள் அறிந்திடும்
காலத்தில் பருவம் சுகம் - கொஞ்சம்
காமம் எனும்சுவை ஏமம் உணர்கையில்
காயங்கள் பெறுதல் சுகம்!
சாதம் பருப்புடன் நெய்யும் பிசைந்துநம்
தாயூட்டும் அன்னம் சுகம் - அதில்
சற்றே நடுவினில் பொரியலும் அப்பளமும்
சார்ப்பாகத் தருதல் சுகம்!
கிண்ணத்திலே மது, எண்ணத்திலே புகை
கிளர்த்தும் சிலர்க்குச் சுகம் - உயர்
கின்னரர் தோற்றிடக் குழவிகள் பேசிடும்
கிளியெனும் மழலை சுகம்!
வண்ணம் நிறைந்ததோர் வானத்து வில்லினை
வாஞ்சையாய்ப் பார்த்தல் சுகம் - இவை
வார்த்தையில் கோத்திட இயலாத போதினில்
வாய்பிளந் திருத்தல் சுகம்!
பார்ப்ப தனைத்தையும் சொல்லுதல் சுகமன்று
பாடா திருத்தல் சுகம்! - அவன்
படைப்பில் அனைத்துமே சொல்லைக் கடந்ததோர்
பரவசம் உண்மைச் சுகம்!
வார்த்தையை மிஞ்சிடும் வாழ்க்கையில் கொஞ்சிடும்
வளமான தெய்வம் சுகம்! - அவன்
வழியில் தொடர்வதும் மடியில் வளர்வதும்
மனதுக்குச் சேர்க்கும் இதம்!!
-30.11.2019
குரல்வழிப் பதிவைக் கேட்கப் படத்தைச் சொடுக்கவும்.
Comments
Post a Comment