சித்திர நடம்
நண்பன் சத்திய நாராயணன் இந்தப் படம் எடுத்துவந்து அதற்கொரு கவிதை தரும்படி கேட்டான்! அதைத் தொடர்ந்து தோழி அமிர்தாவின் நாட்டியத்தைக் காண நேர்ந்தது! அதை இது பிரதிபலிக்க, அந்த இன்பம் இந்த இன்பத்தில் வெளிவந்தது!
சச்சல சலவென வணுங்கு சலங்கை
தத்திமி தகஜனு சுரங்கள் வழங்க
நித்தில நகமொடு நிமிர்ந்த பதங்கள் - நடமாட
மத்தள ஜதிகொடு வணங்கி மயங்கி
வக்கணை மலர்குழல் விரிந்து சுழன்று
மச்சம தெனும்விழி நகர்ந்து நகர்ந்து - விளையாட
சிற்றிடை யெனுமொரு குழந்தை மருங்கி
லொட்டிய அரைவடம் சிணுங்கி நடுங்க
உத்தர தனமவை யுயர்ந்து குலுங்க - வொருமாது
சத்திய விறைவரு லகங்க ளறிந்த
சித்திர நடவகை பொழிந்த துகண்டு
முற்றிய கவிமனம் வியந்து புகழ்ந்து - மகிழாதோ!!
-விவேக்பாரதி
26.12.2019
Comments
Post a Comment