தோன்றும் சிறகு - தூங்கும் முன் தோன்றியது #3
முடிந்த பழமை முளைக்கும் புதுமை
படிந்து மனத்தைப் படுத்தும் - எடுக்குமடி
எல்லாம் பராசக்தி ஏவல் எனநினைத்தால்
வெல்வோம் விதியை விரைந்து!
விரைகின்ற எண்ணம் விதவிதமாய்ப் பேசி
அரைகுறைக்கூத் தாடி அரற்றும் - இருமனமே
உன்னால் எதுவுமில்லை உன்னையன்றி ஏதுமிலை
சொன்னார் அதுவே சுகம்!
சுகமும் துயரும் சுவைத்திடும் நோக்கில்!
அகமும் புறமும் அமைந்த ஜெகமும்
நமதல்ல வென்று நடப்பதை ஏற்றால்
சமரில்லை தோன்றும் சிறகு!!
-விவேக்பாரதி
16.06.2020
Comments
Post a Comment