வராசக்தி சேரும் வசம் - தூங்கும் முன் தோன்றியது #2
பொன்னைப் பெரிதென்பார் போகம் பெரிதென்பார்
மன்னர் பதவி மகிமையென்பார் - அன்னை
அருளிருந்தால் யாவும் அருகணையும் வெற்றுப்
பொருளிருந்தால் நோகும் பிழைப்பு!
பிழைப்போ அவள்தாள் பிடித்தல்! தினமும்
அழைத்தே அவள்பேர் அறைதல் - உழைக்கும்
மடமனமே கேளாய்! மகமாயி தாளைத்
தொடமுயல்வார்க் கில்லை தொடர்!
தொடரும் செருக்கும் துரத்தும் துயரும்
படரும் வெறுமைப் பணியும் - அடடா
பராசக்தி பேர்சொல்லப் பேர்ந்து நொறுங்கும்
வராசக்தி சேரும் வசம்!!
-விவேக்பாரதி
15.06.2020
Comments
Post a Comment