பழகிப் போன குரல் | நவராத்திரி கவிதைகள் 2019


ஆயிரம் அலுவல்களுக்கு மத்தியிலும், கிடைத்துவிடும் ஏதோ ஒரு பயணப் பொழுதில், சில நிமிட இடைவெளிக்குள் ஒரு பாடல் நெஞ்சுக்குள் இசைக்கப்படுகிறது. யார் இசைக்கிறார்? எங்கோ கேட்ட குரலாய்...

பழகிப் போன குரலில் உள்ளே 
   பாடல் கேட்கிறது! - ஆ 
   பாரதி பாடுகிறாள் - மனம் 
மெழுகாய் மறுகணம் மலையாய்க் கனக்க 
   மெல்லிசை மீட்டுகிறாள்! - அடடா 
   மேனியை மீட்டுகிறாள்!

வெள்ளைப் புடைவை தங்கப் புன்னகை 
   வீணை கையளென - அவள் 
   விரலில் தந்துபிகள்! - ஒரு 
பள்ளத்தினில் நிறை வெள்ளத் துகளெனப்  
   பரவிடும் பாடல்களில் - உள்ளே 
   பலவித சங்கதிகள் 

நெஞ்சில் சொற்களின் தனியரசாங்கம் 
   நேர்வது தெரிகிறது - அவளின் 
   நேர்முகம் தெரிகிறது! - உயிர் 
தஞ்சம் என்றவள் தாளடி சேர்கையில் 
   தர்மம் தெரிகிறது - அறுபடும் 
   கர்மம் புரிகிறது 

கல்விக் கதிபதி காக்கும் குணநிதி 
   கவிதைப் பிரியையவள் - வாசக் 
   கருமைக் குழலியவள்! - எழும் 
சொல்வித்துக்குள் ககனம் நிரப்பி 
   சொலிக்கும் மாயையவள்! - நேரில் 
   தோன்றும் சாயையவள்!

ஒருநாள் தெரிவாள் ஒருநாள் மறைவாள் 
   ஓயா விளையாட்டு! - சற்று 
   ஓய்ந்தால் தலையாட்டு - என்றே 
தருவாள் பாடலைப் பொழிவாள் அந்தத் 
   தாயின் ஒருபாட்டு - காற்றில் 
   தரைவரும் தாலாட்டு!!

-விவேக்பாரதி 
29.09.2019

Comments

Popular Posts