அரசியலில் ஈடிலாத ம.பொ.சி


தடித்த மீசை, 
துடிக்கும் கண்கள் 
வெடிக்கும் பேச்சு! 
இவை ம.பொ.சி 

சிலம்பில் ஆசை! 
தமிழ்மேல் காதல்
சிறந்த பண்பு! 
இவை ம.பொ.சி 

தான்பிடித்த கொள்கையோடு 
வாழ்ந்து சென்றவர்
தமிழ்படித்த மேதையா 
யுயர்ந்து நின்றவர் 
மாண்பு மிக்க மீசை யோடு 
மேடை கண்டவர் 
வாள்பிடித்த வீரக்கண்கள் 
பார்வை கொண்டவர்! 

அவர் ம.பொ.சி! 
அவர் ம.பொ,சி! 
இலக்கியத்தில் ஈடிலாத 
ம.பொ.சி!

பட்டி தொட்டியில் சிலம்பின் 
பாடல் சொன்னவர்
பாரதத்தின் நன்மைக்காக 
வாழ்வைத் தந்தவர்
கொட்டு மாமழைகள் போன்ற 
குணமி குந்தவர் 
கூறுகின்ற தமிழ்ச்சிறப்பில் 
வீறு கொண்டவர்! 

அவர் ம.பொ.சி 
அவர் ம.பொ.சி 
அரசியலில் ஈடிலாத 
ம.பொ.சி!!

*

நந்தமிழ் நாட்டின் எல்லை 
நசிவுற இருந்த சேரம் 
நாடெலாம் தமிழர் வீரம் 
நன்றென மனக்கச் செய்த 
செந்தமிழ்ச் சீயம்! எங்கள் 
செம்புலி! சிலம்புச் செல்வர் 
சிறந்தவர் பேரைப் பாடி 
சிலிர்புறு வாய்வெண் சங்கே! 

பாரதி கம்பன் தொன்மைக் 
காப்பியன் வள்ள லாரென் 
றான்றவர் வாழ்வை நன்கு 
ஆய்ந்தவர்! வாழ்க்கை முற்றும் 
தாரக மென்றே தேசக் 
கொள்கையைப் பிடித்த எங்கள் 
தமிழகச் சிலம்புச் செல்வர் 
தம்புகழ் ஊதாய் சங்கே! 

-விவேக்பாரதி
12.03.2019

Comments

Popular Posts