வெட்ட வெளித் திடல்


வெட்ட வெளித்திடலில் - தனியே
   நீயும் நானுமங்கே
சுட்ட கதைகளெல்லாம் - பேசிக்
   களித்திருந்தோம் அழகே !
பட்டப் பகற்பொழுதில் - ஒரு
   வெண்ணிலா தோன்றிடுமேல்
வட்ட வடிவங் கொண்ட - உனது
   வண்ண முக்கத்தழகே!

வானுக் கிடையினிலே! - ஒரு
   வழிதடம் நானமைத்து
தேனுக் கினியவளே  - உனைத்
   தூக்கிச் சென்றிடவோ?
ஊனுக்குள்ளே உலகில் - நன்கு
   உயிர் வசிப்பதுபோல் !
மானுக் கிளையவளே - உன்னுள் 
   மண்டி இருந்திடவா ?

விவேக்பாரதி
21.04.2014

Comments

Popular Posts