வான்கா! நலமா?


பலநேரம் விழிக்குகையில்
சுற்றிச் சுழலும் என் இரவை
நீங்கள் எப்படி இவ்வளவு துல்லியமாய்
வரைந்தீர்கள் வான்கா? 
அந்தச் சூழலின் மஞ்சள் நிறம் 
நான் மாட்டிக் கொண்ட 
நினைவுகளின் பழுப்பு என்று 
உங்களுக்கு எப்படி தெரிந்தது? 
இத்தனை அடர்ந்த நீலம்தான்
என் இரவென்று 
நீங்கள் எப்போது பார்த்தீர்கள்? 
பின்புறத்தில் பற்றி எரியும் 
அந்த நிழல் தீயில் 
என் எண்ணம்தான் ஒவ்வொரு விறகாய் 
விழுந்து கொண்டிருக்கிறது என்பதை 
நீங்கள் எவ்வாறு அறிவீர்கள்? 
ஒளிரும் ஓர நிலவாய் 
ஒவ்வொருவரின் முகமும் வந்து போக,
நீங்கள் வரைந்த நட்சத்திர இரவாய் 
நான் இயங்கிக் கொண்டே இருக்கிறேன்...
ஊர் மட்டும் மொத்தமும் 
அமைதியாய் தூங்குகிறது!!

-விவேக்பாரதி
28.07.2024
10.32 PM

Comments

Popular Posts