வானநாடகம்
சிறுசிறு மென்நடை நீநடந்தே - கரைச்
சிப்பிகளோடு பேசுகிறாய்
விறுவிறுவென்றே அலைசினுங்கி - உன்
விரல்தொட முந்திப் பாய்கிறது
விறுவிறுவென்றே அலைசினுங்கி - உன்
விரல்தொட முந்திப் பாய்கிறது
அருகினில் வந்ததும் பேச்சிழந்து - உன்
அழகிய கால்களில் வெள்ளிகளாய்
நுரையெனத் தீர்ந்து மறைகிறது - பின்
நுழைந்திட மறுஅலை எழுகிறது
அழகிய கால்களில் வெள்ளிகளாய்
நுரையெனத் தீர்ந்து மறைகிறது - பின்
நுழைந்திட மறுஅலை எழுகிறது
கடற்கரை எங்கிலும் இப்படியே - உன்
கால்படும் இடங்களில் கவிதைகளாய்
நடந்தவுன் சுவடுகள் சிரிக்கிறது - இந்த
நாடகத்தை வான் ரசிக்கிறது!
கால்படும் இடங்களில் கவிதைகளாய்
நடந்தவுன் சுவடுகள் சிரிக்கிறது - இந்த
நாடகத்தை வான் ரசிக்கிறது!
வான்
மண்ணெனப் பிறந்திட நினைக்கிறது - உன்
மலர்ப்பதம் தொடும்வரம் கேட்கிறது
தண்ணீ ராகப் பிறந்தேனும் - உனைத்
தழுவிடும் ஒருவரம் வேட்கிறது!
மண்ணெனப் பிறந்திட நினைக்கிறது - உன்
மலர்ப்பதம் தொடும்வரம் கேட்கிறது
தண்ணீ ராகப் பிறந்தேனும் - உனைத்
தழுவிடும் ஒருவரம் வேட்கிறது!
வெறுமனே உன்னைப் பார்த்தபடி - உன்
விளையாட்டெல்லாம் வியந்தபடி
நிறுவிய கல்லாய் இருப்பதனால் - வான்
நிம்மதி இழந்தே அழுகிறது!
விளையாட்டெல்லாம் வியந்தபடி
நிறுவிய கல்லாய் இருப்பதனால் - வான்
நிம்மதி இழந்தே அழுகிறது!
அதில்,
ஒருசிறு மழைத்துளி கசிந்தவுடன் - நீ
ஒதுங்கி விடாமல் நனைந்திருந்தாய்
பெருவரமாய் உனைத் தழுவியதாய் - வான்
பேரிடியாகிச் சிரித்தடடி!!
ஒருசிறு மழைத்துளி கசிந்தவுடன் - நீ
ஒதுங்கி விடாமல் நனைந்திருந்தாய்
பெருவரமாய் உனைத் தழுவியதாய் - வான்
பேரிடியாகிச் சிரித்தடடி!!
விவேக்பாரதி
03-09-2022
Comments
Post a Comment