சொல் இருந்தால் வருகிறேன்
நீல நெடுவானில் - நிலவை
நீவிக்கொண்டே செல்லும் மேகங்களே
காலம் அறிந்தீரோ - எனைக்
கனவினை விட்டேன் எழுப்பிவிட்டீர்?
மூலப் பெருங்காற்றில் - நிலவை
முத்தமிட்டே செல்லும் முகிலினங்காள்
வேலை மறந்தீரோ - ஏன்
வேகமாய் வந்தென் துயில்கலைத்தீர்?
வெண்ணெய்க்கட்டி நிலவை - தினம்
மேலுறத் தொட்டுத் தழுவிடுவீர்
உண்மைச் சுவைமொழிவீர் - நிலா
உப்புக் கரிக்குமோ? தேனினிப்போ?
கண்மை நிறஇரவில் - என்
காதலியின் குழல் மல்லிகைபோல்
வண்ணம் அமைத்துவந்தீர் - அந்த
வானம் சுடுமோ? குளிர்பரப்போ?
அன்பரைக் கண்டவுடன் - மனம்
ஏறி அமர்கின்ற நாணத்தைப்போல்
சன்னிதி முன்னிலையில் - வந்து
தரிசனம் போர்த்திடும் கண்ணீர்போல்
ஜன்னலின் கம்பிவழி - எனைச்
சாரத் தழுவும் நிலவொளியை
மென்மைத் துகிலெனநீர் - வந்து
மூடி மறைத்திடும் நாடகமேன்?
காற்றில் அழைப்பதுமேன்? - வெளிக்
காற்றாய்க் கலந்திடச் சொல்வதுமேன்?
தோற்றத் தடையின்றியே - உம்போல்
தோன்றிட ஆசைகள் செய்வதுமேன்?
நேற்றின் நினைப்புமின்றி - நாளை
நிகழ்வதைப் பற்றிய எண்ணமின்றி
ஆற்றலுடன் பறப்பீர் - என்
ஆழ்மன பாரத்தை யார்சுமப்பார்?
செல்லுங்கள் மேகங்களே - நிலாச்
செழுமை முழுவுடல் தீண்டிடட்டும்
எல்லைகள் ஏதுமின்றி - என்
ஏக்கங்களை அது தீர்த்திடட்டும்
வெல்லுக உம்பயணம் - நாளை
வேண்டுமென்றால் வந்து கூப்பிடுங்கள்
சொல்லிருந்தால் வருவேன் - அன்றி
தூங்கிவிட்டால் துயில் நீக்கவேண்டா!!
விவேக்பாரதி
17 ஜூன் 2022
Comments
Post a Comment