என் இசை கேளுங்கள்
என்னிசை கேளுங்கள் - அது
இன்பத் தனிதியானம்
புன்னகை தாருங்கள் - கதை
புரிந்த மறுநிமிடம்!
வாழ்த்திசை எனதாகும் - நல்ல
வார்த்தைகள் அதிலதிகம்
தாழ்த்தி இசைக்காதீர் - அது
தர்மத்தின் இசையாகும்!
மங்கள இசையெனது - அதில்
மனிதர்களே கடவுள்
பொங்கிடும் உற்சாகம் - நான்
பூஜை செய்யும் மதம்
மெல்லிசை அதுவானால் - உமை
மென்மை மலராக்கும்
வல்லிசை ஆனாலோ - உங்கள்
வாழ்க்கையைக் கல்லாக்கும்
துள்ளிசையும் வரலாம் - உங்கள்
தூக்கம் தடைபடலாம்
உள்ளிசையாக வரும் - சில,இவ்
ஊரிசை ஆகவரும்
எவ்விசை என்றாலும் - அதில்
இலங்குவ(து) என்சுருதி
செவ்விசையாய் வருமே - இந்த
ஜகத்தின் நலன்கருதி
மரண இசைதருவேன் - அதில்
மரித்தவர் புகழடைவார்
சரண இசைபடைத்தால் - இறை
தரிசனம் அதிலிருக்கும்
படைக்கும் இசையெனது - எனில்
படைப்பவன் நானல்ல
கொடுக்கும் இயற்கையொன்றே - நான்
கும்பிடும் இறையாகும்
இசைக்கும் கருவிகளை - என்
இதயம் சுமப்பதனால்
அசைக்கும் மூச்சினிலும் - இசை
ஆடிப் பிறக்கிறது!
வரம்பே இல்லாமல் - இசை
வாழ்வாய் அமைகையிலே
மரபும் புதுமையும்தான் - இந்த
மண்ணில் உயிர்க்கிறது
கணக்கு தெரிவதில்லை - நான்
காற்றில் படைக்குமிசை
மனத்துக் குளத்தினிலே - அவை
மண்டும் உணர்வினலை
பிறந்த(து) இசைப்பதற்கே - நான்
பிழைப்பதும் இசைப்பதற்கே
பறப்பதும் இசையாலே - என்
பாடல்கள் உங்களுக்கே!!
-விவேக்பாரதி
22-12-21
Comments
Post a Comment