ஏன் எழுதவில்லை??


ஏனெழுத வருகுதிலை இப்போ தென்றே 
    எண்ணுவதை நான்முழுதும் விட்டு விட்டேன் 
வானழுதால் மண்சிரிக்கும், மெழுகு வர்த்தி 
    வடிவெரிந்தால் இருள்விலகும் என்பதைப்போல்
நானழுத கண்ணீரெல் லாமென் பாட்டாய் 
    நாளுக்கு நாள்முளைக்கும் என்பதாலே 
மீனழுத கண்ணீர்போல் நெஞ்சில் மட்டும் 
    மீட்டுகிறேன் தனிமையெனும் யாழை மெல்ல 

பூபார்த்தால் கவிதைவரும் மின்னல் கொள்ளூம் 
    புயல்பார்த்தால் கவிதைவரும் சன்னிதிக்குள் 
தீபார்த்தி பார்த்தாலும் கவிதை கொட்டும் 
    தென்றலெனைத் தொட்டாலும் கவிதை கொட்டும் 
கோபார்த்த மாகசில சுள்ளி நெஞ்சில் 
    கொளுந்தைவிட் டெரிகையிலும் கவிதை உண்டாம் 
தாபார்த்த மாய்த்தேகம் கொதிக்கும் போதும் 
    தனிக்கவிதை எழுதுவது குறைவ தில்லை 

இதனாலே எழுதவென அமர்வ தில்லை 
    இருக்கையிலே அமர்ந்தாலும் வருவ தில்லை 
எதனாலே எவ்விடத்தில் பூகம்பங்கள் 
    எதிரொலிக்கும் என்றறியா நிலத்தைப் போல 
பொதுவாக மனக்கதவை திறந்து வைத்து 
    போவதுவும் வருவதுமாய் வாழு கின்றேன் 
அதுவாகக் கவிதைவரும் அனுப விப்பேன் 
    அண்டிவரா நேரத்தில் காத்தி ருப்பேன்!!

-விவேக்பாரதி 
27.10.2020

Comments

Popular Posts