சதுரங்க வாழ்க்கை
காலமாம் வெளியினில் கருப்புடன் வெள்ளையாய்
கட்டங்கள் நிற்குதம்மா - அந்தக்
கதையிலென் பாத்திரம் ஏதென்று தெரியாமல்
கணக்குகள் விக்குதம்மா!
பாலனாய்க் குமரனாய் மனிதனாய்க் கவிஞனாய்ப்
பலவேடம் போடுகின்றேன் - எனில்
பாடங்கள் சொல்கின்ற விளையாட்டில் என்னுடைய
பணியென்ன தெரியவில்லை!
ஓரடி நகர்கின்ற சிப்பாயும் ராஜாவும்
ஒன்றெனத் தோன்றுகிறார் - எனில்
ஒருவரைக் காத்திட இன்னொருவர் போராடி
உழைத்தாலும் வீழுகின்றார்
நேரடி நகர்கின்ற யானையின் பாய்ச்சல்போல்
நிறையபேர் தோன்றுகின்றார் - அவர்
நேரான பார்வையை மட்டுமே கொள்கிறார்
நெளிவுசுழிவில் தோற்கிறார்
மும்மூன்று கட்டத்தில் வளைகின்ற குதிரைபோல்
முயற்சியில் மாற்றிமாற்றி - சிலர்
முன்வைத்த கால்போல பின்வைக்கவும் செய்து
மயக்கிக் குழப்புகின்றார்
தம்பாதை தம்போக்கு மந்திரி போல்சிலர்
தரையினில் வாழுகின்றார் - அவர்
தம்பட்டம் செய்தாலும் சரியாக உதவாமல்
தண்டமாய் வீழுகின்றார்
எப்பக்கம் பார்ப்பினும் ராணியின் ராஜ்ஜியம்
எதிர்ப்பவர் நிலை பூஜ்ஜியம் - ஆக
எவராய் இருப்பினும் ராணியை வீழ்த்தவே
இயக்கம் தொடக்குகின்றார்
உட்பக்கம் வெளிப்பக்கம் பகைசூழ்ந்த விளையாட்டில்
எப்பக்கம் நான் சேர்வதோ? - இந்த
உலகத்து சதுரங்க ஆட்டத்தில் எதிலென்றன்
உண்மையை நான் காண்பதோ??
-விவேக்பாரதி
27 ஜூலை 2022
சொல்லும் பொருளும் சிறப்போ சிறப்பு.
ReplyDeleteநன்றி
Delete