கவிதைப் பிறவி
இதை உதடுகள் சொல்லிக்கொண்டே இன்றைய நாளை விடுவித்தது!
காலம் தாண்டும் சொற்களையே - என்
கவிதை சுமந்து வருகிறது!
கண்கள் மூடிய மறுகணமே - எனைக்
கற்பனைக்குள் போய் விடுகிறது!
காலை மாலை இரவெல்லாம் - அதன்
கணக்கில் தூள்தூள் படுகிறது!
காமம் தணியும் சுகம்போலே - ஒரு
கவிதை முடிந்து விழுகிறது!
என்றும் இல்லாத் தனிமையிலும் - என்
எண்ணம் தனிமைப் படவில்லை
ஏதோ ஏதோ சொற்சந்தை - ஒலி
எல்லாத் திசையும் கேட்கிறது!
ஒன்றும் செய்யா துறங்கிடலாம் - என
உள்ளம் நினைத்தால் அதுகூட
ஒத்துழைக் காமல் இரவுகளே - அறை
உள்ளே நீண்டு விடிகிறது!
முணுமுணுப் பெல்லாம் பாட்டாக - சொல்
முத்துகள் சிந்தும் வேட்டாக
முயற்சிக் காமல் தொடர்கிறது - மென்
மூர்க்கம் அன்பும் சுடர்கிறது!
கணங்கள் எல்லாம் நின்றபடி - நான்
காற்றின் அலைகளைக் கண்டபடி
காகிதம் போலே கிடக்கின்றேன்! - ஒவ்வோர்
கவிதைக்கும் நான் பிறக்கின்றேன்!!
-விவேக்பாரதி
24.03.2020
Comments
Post a Comment