சன்னிதியில் விழ வேண்டும்
அறியாத சிறுவனின் புரியாத நெஞ்சினில்
அம்மைநின் ஆர்பாட்டமா? உன்றன்
அன்புக்கு நான் வாட்டமா?
மறவாமல் உன்பெயர் சரியாய் மொழிந்திட
மாற்றிவிட்டாய் ஏற்றமா? மனதில்
மல்லிகைத் தேரோட்டமா?
வறுமையின் நோயிலும் வாழ்க்கையின் பாயிலும்
வாடிக் கிடக்கின்றவன் - வெறும்
வார்த்தை சுமக்கின்றவன்!
பிறந்ததை அன்றியோர் செய்தவறு தெரியாத
பித்தாய் அலைகின்றவன்! - உன்னைப்
பின்னால் தொடர்கின்றவன்!
கடமைகள் யாதென்று கல்லாதவன் நெஞ்சைக்
கல்லாக்கி வாழ்கின்றவன் - எண்ணம்
கழுவாமல் வீழ்கின்றவன்
உடமைகள் என்றிந்த போகத்தை நம்பியே
உடலோம்பி வாழ்கின்றவன் - அதற்
குத்திகள் காண்கின்றவன்
மடநெஞ்சின் வார்த்தையை முழுதாக நம்பியே
மரியாதை பேர்க்கின்றவன் - மௌன
மதிவேலை அறியாதவன்!
திடமான உன்னையே பற்றத் தெரிந்தவன்
தீபோல கவிசொல்பவன் - கண்ணில்
தீபமிட்டே செல்பவன்!
இயல்கின்ற சக்தியாய் இருக்கின்ற தெய்வம்நீ
இருப்பதே வீணென்று நான் - உன்றன்
இசைபாட வாழ்கின்ற நான்
முயல்கின்ற வினையன்றி பிறிதொன்றை அறியாமல்
மூச்சுப் பிடிக்கின்ற நான் - என்முன்
முறுவல்கள் செய்கின்ற நீ!
தயவான கரம்கொண்டு தாள்சேர்ந்த பக்தர்க்குத்
தண்ணருள் காட்டிடும் நீ - உன்றன்
தாளிலோர் புல்லென்று நான்
வியப்பான நிலையம்ம! நானும்நீ என்கையில்
வீழ்ந்தே கிடப்பதும் நீ - பார்த்து
விளையாட் டிழைப்பதும் நீ!
எனக்கென்ன வேணுமோ எல்லாமும் உன்செயல்
எதையிங்கு நான்வேண்டிட - உன்றன்
எழிலன்றி எதைவேண்டிட
மனத்துன்னை வைத்தொரு மலராக வாழ்ந்திடும்
மரியாதை நிலைவேண்டுவேன் - பின்னர்
மனம்தீர வழிவேண்டுவேன்
தினமொற்றை வேடமாய்த் திறனற்ற நாடகம்
தீர்கின்ற நிலைவேண்டுவேன் - சொல்லித்
தேற்றிடக் கவிவேண்டுவேன்
உனையிந்தப் பாலகன் உரிமைகள் மிஞ்சியே
உள்ளத்தின் துள்ளல்களால் - கொஞ்சம்
உளறலாய் இவைவேண்டுவேன்!
புகழுக்குள் வீழாத நெஞ்சுவேண்டும் இதழில்
புன்னகை நிற்க வேண்டும் - சூழும்
புதிர் பார்த்து கற்க வேண்டும்
நிகழ்கின்ற மாற்றத்தை ஏற்கவேண்டும் என்றன்
நினைவில் நீ பூக்க வேண்டும் - உன்றன்
நிழலுயிர் ஆக்க வேண்டும்!
சுகமென்ற சோம்பலைத் தள்ளவேண்டும், நேரச்
சுவைதனைக் கொள்ள வேண்டும்! - கொஞ்சம்
சுறுசுறுப் போங்கவேண்டும்!
சகமென்றும் வாழ்த்திட வாழவேண்டும் அதிலும்.
சரியாக வாழ வேண்டும் - உன்றன்
சன்னிதியில் வீழ வேண்டும்!!
-விவேக்பாரதி
07.04.2019
07.04.2019
Comments
Post a Comment