கயிலையும் மயிலையும்



கயிலை மலையிருக்கக்
கருணைக் கரமிருக்கக்
கவலை இனியேது!

மயிலைப் பதியிருக்க
மனதில் அவனிருக்க
மறுபடி வரவேது?

பரமன் துணையே பலமெனப் பிடித்தால்
    பாதை தெளிந்திடலாகும்
சரணம் சரணம் எனவே செபித்தால்
    சந்தேகங்கள் மாயும்

தலைவன் அவனே எனவே நினைத்தால்
    தன்னால் அடிமை நீங்கும்
உலகம் அவனின் விளையா டலென
    உணர்ந்தால் கடமை ஓங்கும்!

அகமே கோவில் அன்பே தீபம்
    அறிவே அதில்வரும் ஜோதி
சுகமே சிவமாம் சிவமே சுகமாம்
    சுடரில் உயிரும் பாதி!

-விவேக்பாரதி
17.04.2019


Comments

Popular Posts