காதல் குறிஞ்சி


முன்பனி மூடிய யாமத்திலே புலி 
முத்தமிட்டுக் கொள்ளும் பூங்குறிஞ்சி!
இன்னுயிர் சேர்ந்துள காதலர்கள் தமை 
இட்டமுடன் புல்லும் வான்குறிஞ்சி! 

கூதிரிளந் தென்றல் தூதுவர, வந்து 
கொள்ளை இருட்டினில் தொல்லைதர 
ஆதரவாகத் தலைவன் தலைவியை 
அன்பில் அணைத்திடும் தேன்குறிஞ்சி

சாலை முனைகளில் நீரருவி, சின்னச் 
சந்திகளில் சுனை இன்சுவைநீர்
பாலென ஓடிக் குளிர்கொடுக்க, இறை 
பருகிக் களிக்கும் புலம்குறிஞ்சி!  

தேனெடுக்கச் செல்லும் வேளையிலே, கிளி 
தீந்தமிழ்ப் பாட்டன் கபிலனின்சொல்
கானந் தொடுத்துப் புகழ்ந்துரைக்கத் தமிழ்க் 
காடு மணந்திடும் தீங்குறிஞ்சி!

வேடர் தினைப்புனம் காத்திடவே கவண் 
வேகஞ் சுழற்றும் விசையறிந்து 
பாடம் படித்திடும் சூறைவளி வந்து 
பாதம் பணிந்திடும் கார்குறிஞ்சி!

சந்தன வாசம் இடம்நிறைக்க, இசைத் 
தொண்டகத் தொற்பறை கொட்டிசைக்க, 
சொந்த மலைநெல் கிழங்குவகை உண்டு 
துள்ளுங் குறவரின் ஊர்குறிஞ்சி! 

உள்மனம் தாங்கிடும் பேரமைதிச் சுகம்
ஊர்மணம் தாங்கிடும் மாமலையைக்
கள்மணத்தோ(டு) இசை யாழ்மணமும் வரும்
காதற் குறிஞ்சியை வாழ்த்திடுவோம்!!

-விவேக்பாரதி
07.07.2023
04.50 PM

Comments

Popular Posts