தூங்கும் கவிதை


ஒரு பூவின் 
மெல்லிய குரட்டை ஒலி 
சங்கராபரணத்தில் இருக்கும் 
எனத் தெரியுமா?

ஒரு மின்னலின் 
சின்னச் சினுங்களுக்கு 
தில்லானா என்றும் 
பெயர் வைக்கலாம்! 

சோம்பல் முறிக்கும் 
நிலவின் செய்கைக்கு ஈடாக 
வான சாஸ்திரத்தில் ஒரு 
வரைபடம் கிடையாது! 

எதைக் கண்டோ
பாதிக் கனவில் பூக்கும் 
இதழோர சிரிப்புகளை வரைய 
பிக்காஸோவுக்கும் டாவின்சிக்கும் 
கொடுத்து வைக்கவில்லை!

பஞ்சுமெத்தையின் மேல் தூங்கும் 
வெண் மேகத்தை 
கருப்புப் போர்வை போர்த்திருப்பதை 
இரவென்று நினைத்தால், 
வணக்கம்,
கவிஞராகி விட்டீர்கள்! 

ஏறி இறங்கும் 
மூச்சின் நடன லயத்தில், 
ஒரு கிட்டாரே 
தூங்கும் எழில் காண 
உங்களுக்கு
இசை அறிவு 
அவசியம் இல்லைதான்! 

இதற்கெல்லாம் காரணம் 
நான் பாடக் கேட்டு 
வீடியோ காலில் அவள் 
அசந்து தூங்குகிறாள்!
அவளுக்கும் சேர்த்து விடிய 
நான் காத்திருக்கிறேன்! 
கூடவே இந்தக் கவிதையும்!!

விவேக்பாரதி
04 மார்ச் 2022

Comments

Popular Posts