ஒற்றுக் காதல்


அந்த இந்த எனுமிடத்தில் 
   அகரத் திகரத் துறும்சுட்டில் 
வந்தே யாகும் ஒற்றெழுத்து 
   வளைக்கை யாளே காண்பாயே! 

அப்படி இப்படி என்கின்ற
   அந்தச் சுட்டுச் சொல்லோடும்  
எப்படி என்ற வினாவிலும் 
   ஏற்ற வலியும் மிகுந்திடுமே! 

இரண்டாம் வேற்று மைவிரியாய் 
   இலங்குங் காலை ஒற்றுமிகும் 
"உரத்தைப் போட்டான்" எனும்போது 
   உயிர்க்கும் இப்பைக் காண்பாயே! 

ஓரெ ழுத்தொ ருமொழியில் 
   ஒற்று வருதல் அவசியமாம் 
பாரேன்! "தீக்கு ளித்தானில்"
   படரும் இக்கை! பசுங்கொடியே! 

மென்றொ டர்க்குற் றுகரமுமே 
   மேவி வேற்று மைகண்டால் 
என்றும் வருமே ஒற்றெழுத்து 
   எழுதக் "குரங்குக் கை"யன்றோ?

வினையெச் சத்தில் ஒற்றெழுதல் 
   வியப்பே இல்லை சிறுகிளியே! 
முனியன் "கற்றுத் தேர்ந்தா"னாம்
   முன்னே எடுத்துக் காட்டுண்டே! 

ஈறால் கெடும்பே ரெச்சங்கள் 
   இயங்கி நிற்கும் ஒற்றுடனே 
"மாறாக் காதல்" எழில்மலரே! 
   மன்னும் ஒற்றைப் பாரடியே!  

ஒட்டும் உளத்தின் ஆசைபோல் 
   உயர்வே ஒற்றின் ஓசைநயம் 
கட்டும் கவியில் இனியேனும் 
   கவனம் கொள்வாய் கவிமணியே!! 

-விவேக்பாரதி 
08.09.2016

Comments

Popular Posts